×

திருச்சி தனியார் பள்ளியில் நடந்த விழாவில் விபரீதம்: சாமியானா பந்தல் விழுந்ததில் 10-க்கு மேற்பட்ட மாணவர்கள் காயம்

திருச்சி: திருச்சி கருமண்டபம் பகுதியில் தனியார் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் சாமியான சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். திருச்சி கருமண்டபம் பகுதியில் ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கூடத்தில் இன்று காலை 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்காக பள்ளி வளாகத்தில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டு மாணவர்கள் உட்கார வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று காற்று வீசியது. இதில் பின்பக்க சாமியான பந்தல் சரிந்து விழுந்தது. இதில் 10-க்கு மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். மேலும் மணிகண்டன் என்ற ஆசிரியருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து படுகாயம் அடைந்த மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சில மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்களது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பதை உறுதி செய்து பின் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் இன்று கருமண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருச்சி தனியார் பள்ளியில் நடந்த விழாவில் விபரீதம்: சாமியானா பந்தல் விழுந்ததில் 10-க்கு மேற்பட்ட மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,samyana pandal ,Tiruchi ,Sami ,Tiruchi Karumandapam ,Samiana pandal ,Dinakaran ,
× RELATED திருச்சி எ.புதூரில் பைக் திருடன் கைது